அயோத்தி தீர்ப்பு-உஷார்படுத்தப்பட்ட தமிழகம்!

நாளை அயோத்தி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் மாலதி நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்த உயர் மட்டக் கூட்டத்தில் உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர், டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களின் காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் பேர்:
இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்கள், பெருநகரங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அனைவருக்கும் மாலதி அறிவுறுத்தினார். பாதுகாப்புப் பணியில் 90 ஆயிரம் போலீஸார் மற்றும் 10 ஆயிரம் அதிகாரிகள் என 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாகன சோதனை, 24 மணி நேர கண்காணிப்பு, தீவிர ரோந்துப் பணி, முக்கிய இடங்களில் போலீஸ் படைகள் குவிப்பு, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் படையினர் என அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
போலீஸாருக்கு விடுமுறை ரத்து:
தமிழகம் முழுவதும் போலீஸாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்தது. அனைவரும் பணியில் ஈடுபட ஆயத்த நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மறுஉத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் எனவும் டிஜிபி லத்திகாசரண் தெரிவித்திருந்தார்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என அனைத்து இடங்களில் ரகசியக் கேமரா கண்காணிப்பு மூலம் பலத்த பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 15 பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலமோ பிற ஊர்வலங்களோ நடத்தக் கூடாது என தடை செய்யப்பட்டிருந்தது. போலீஸ் தடைச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டிருந்தது.
கோவை நகரில் பலத்த பாதுகாப்பு:
மத ரீதியாக பதட்டமான நகரமான கோவையில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.
இரு மாவட்டங்களிலும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நெல்லையில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை நடத்தப்பட்டது. மேலப்பாளையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுக் கடைகளை மூடவும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.












Click it and Unblock the Notifications