சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக எம்.எல்.ஏ. குடும்பத்தோடு விடுதலை
வேலூர்: வேலூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ. வுமான காந்தியை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
வேலூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருப்பவர் காந்தி.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காந்தி மீதும், அவரது மனைவி கமலா, மகன் வினோத் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2005-ம் ஆண்டு முதல் வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், மூவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.