காற்றாலை மின்சாரம் கட்: தமிழகத்தில் 3 மணி நேர மின்தடை அமல்
நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தினசரி 3 மணி நேர மின்தடை அமுலுக்கு வந்துள்ளது.
மின் பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் 2 மணி நேரம் மின்தடை அமுலில் உள்ளது. கடந்த மே மாதம் முதல் காற்றாலை மூலம் தினசரி 1800 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால் சிறுது காலம் மின்தடை நேரம் குறைந்தது.
இருப்பினும் தென்மேற்கு பருவக் காற்று சரிவர வீசாததால் மீண்டும் காற்றாலை மின்உற்பத்தி குறையத் தொடங்கியது. நேற்று காற்றாலைகள் மூலம் 240 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழகத்தில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இதை சமாளிக்கக் கூடுதலாக 1 மணி நேரம் மின்தடை ஏற்படுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று முதல் 3 மணி நேர மின்தடை அமுலுக்கு வந்தது.
மின் தேவைக்கேற்ப மாலை 6 மணி முதல் 10 மணி வரை தேவைப்பட்டால் கூடுதலாக அரை மணி நேரம் ஒவ்வொரு பகுதியாக மின்தடை ஏற்படுத்தவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
காற்றாலை மூலம் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை கிடைக்க வேண்டிய மின்சாரம் கடந்த 21-ம் தேதியே குறைந்து விட்டதால் மின்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.