எனக்கும் இருக்கு ஓட்டு..20 சீட்டு தந்தா தான் கூட்டு: டி.ராஜேந்தர்
சென்னை: விஜய டி.ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடந்தது.
கூட்டத்தின் முடிவில் கட்சியின் மதுரை மற்றும் புறநகர் பகுதி புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை டி.ராஜேந்தர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளே இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை 20 சீட்டு தரும் கட்சியோடுதான் கூட்டு.
சேது சமுத்திர திட்டத்திற்கு முதலில் நான் தான் எதிர்ப்பை தெரிவித்தேன். இப்போது அந்த திட்டம் கிடைப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் எவ்வளவு பணம் மற்றும் கால விரயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் லட்சிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அக்டோபர் 3ம் தேதி எனது பிறந்தநாள். அன்றைய தினம் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெறும். அடுத்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னர் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றார்.