சுற்றுலா சென்ற ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி மாயம் : போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி: சுற்றலா சென்ற தேனி ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி திடீர் என்று காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே போடி நாயக்கனூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் 120 பேர் நேற்று முன்தினம் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
கன்னியாகுமரிக்குச் சென்ற இவர்கள் அங்கு ஒரு ஹோட்டலில் தங்கினர். அதிகாலையில் சூரியன் உதிக்கும் அழகைக்காண சங்கிலித்துறை கடற்கரைக்குச் சென்றனர். அங்கு மாணவ, மாணவிகள் புகைப்படம் எடுத்தனர். பிறகு ஹோட்டலுக்குத் திரும்பியபோது ஒரு மாணவி மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது.
இதையடுத்து மற்ற மாணவர்கள் மாணவியைத் தேடிச் சென்றபோது அவரை யாரோ காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிக்கும் இராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆனது தெரிய வந்தது.
அந்த மாணவியின் செல்போன் அவர் தோழி ஒருவரிடம் இருந்தது. அதில் கடைசியாகக் கோவையில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.