For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு ஒத்திவைக்கப்படதற்கு காங்.வரவேற்பு-பாஜக கருத்து தெரிவிக்க மறுப்பு

Google Oneindia Tamil News

Ayodhya
லக்னோ: அயோத்தி தீர்ப்பை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளதற்கு இந்து, முஸ்லீம் அமைப்புகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி இந்த உத்தரவை வரவேற்றுள்ளது. அதேசமயம், பாஜக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

சன்னி மத்திய வக்பு வாரியம், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்டோரும் பெரும் ஏமாற்றம்வெளியிட்டுள்ளனர்.

அதேசமயம், பேசிப் பார்க்கலாம், அதில் தவறில்லை என்று கூறியுள்ளார் அயோத்தி வழக்கை தொடர்ந்த முக்கிய மனுதாரர்களில் ஒருவரான நிர்மோஹி அகரா.

இதுகுறித்து நிர்மோஹி அகராவின் வக்கீல் ரஞ்சித் லால் கூறுகையில், இது சரியான உத்தரவுதான். பேச்சுவார்த்தைக்கு இன்னும் கூட வாய்ப்புள்ளதாகவே கருதுகிறோம். இதுபோன்ற பெரிய, முக்கியப் பிரச்சினைகளை சட்டமும் கோர்ட்டும் தீர்த்து விட முடியாது. பிரச்சினைக்குரியவர்கள் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்க முடியும் என்றார்.

சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் சபரயேப் ஜிலானி கூறுகையில், இது பெரும் ஏமாற்றம் தருகிறது. விரைவில் தீர்ப்பை அளிக்குமாறு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்றார்.

ராம் ஜென்மபூமி புரந்தர் சமிதி வக்கீல் ரஞ்சனா அக்னிஹோத்ரி கூறுகையில், தீர்ப்பை மேலும் மேலும் தாமதப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.
மேலும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எந்தப் பயனையும் தராது.

60 வருடமாக ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்கிற போது ஒரே வாரத்தில் எப்படி தீர்த்து விட முடியும். தீர்ப்பை தாமதப்படுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம். குறிப்பாக இதில் அரசியல் பின்னணி இருந்தால் அதை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்போம். தற்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிதான் தீர்ப்பை தாமதப்படுத்த கடுமையாக முயன்று வருகிறது என்றார் அவர்.

விஎச்பி வக்கீல் மதன் மோகன் பான்டே கூறுகையில், ரமேஷ் சந்தர திரிபாதியின் மனுவை நீதிமன்றம் ஏற்றிருக்கவே கூடாது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவரான,90 வயது ஹசிம் அன்சாரி கூறுகையில், என் வாழ்நாளுக்குள் தீர்ப்பை காண விரும்புகிறேன். அரசியல்வாதிகளின் சதியால் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,

அயோத்தி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவோ, அது இயலாவிட்டால், வழக்கு மூலமாகவோ தீர்வு காணலாம் என்று இத்தனை காலமாக காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதை ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும் என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் விதித்த தடை பற்றி நாங்கள் எதுவும் கூற மாட்டோம். அயோத்தி விவகாரம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த தீர்ப்பு வந்த பிறகே எங்கள் கருத்தை தெரிவிப்போம் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் முடிவு, எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திட்டமிட்ட நாளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இப்போது தீர்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

விசுவ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா கூறுகையில், அக்டோபர் 1-ந் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஓய்வு பெறுகிறார். அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால், புதிய பெஞ்ச் அமைக்கப்பட்டு, ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கப்படும். இதனால் தீர்ப்பு, காலவரையின்றி தாமதம் ஆகும் என்று அஞ்சுகிறோம். இந்த முடிவு, ராமரை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறுகையில், ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். தீர்ப்பு காலதாமதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில் கட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X