டெல்லி துப்பாக்கி சூடு: தீவிரவாத இ-மெயில் நார்வேயில் இருந்து வந்தது-ப.சிதம்பரம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜும்மா மசூதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த பஸ் மீது 2 தீவிரவாதிகள் துப்பாக்கி சுடு நடத்திவிட்டுத் தப்பினர். இதில் தைவானைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
இதையடுத்து செய்தி நிறுவனங்களுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பெயரில் இ-மெயில் வந்தது.
காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள். போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும்,
மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் அந்த இ-மெயில் நார்வேயில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், துப்பாக்கி சூடு நடந்த சில மணி நேரங்களில் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் மொபைல் போனில் இருந்து அந்த மெயில் இந்தியன் முஜாகிதீன் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.
அதை அனுப்பி நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதை அனுப்பி நபர்களுக்கும் தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்றும் உறுதியாகத் தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications