டெல்லி காமன்வெல்த் போட்டி-உடைந்த பாலத்திற்குப் பதில் இரும்புப் பாலம்
டெல்லி: டெல்லியில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு அருகே கட்டப்பட்ட நடை மேம்பாலம் உடைந்து விழுந்து விட்டதால், அதற்குப் பதிலாக இரும்புப் பாலத்தை கட்டும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.
காமன்வெல்த் போட்டியையொட்டி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் பார்க்கிங் பகுதியையும், ஸ்டேடியத்தையும் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் ஒன்றை கட்டி வந்தனர். ஆனால் இந்தப் பாலம் சில நாட்களுக்கு முன்பு இரண்டாக உடைந்து விட்டது.
இதையடுத்து அவசர கதியில் இந்தப் பாலத்தை சீரமைப்பதற்கு வாய்ப்பே இல்லாததால், ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ராணுவம் இரும்புப் பாலத்தை கட்டவுள்ளது.
இதுகுறித்து டெல்லி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சின்ஹா கூறுகையில்,
ராணுவ அலுவலகங்கள், முகாம்களில் பெய்லி பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறுகிய தூரத்தைக் கடப்பதற்காக இத்தகைய பாலங்கள் வேறொரு இடத்தில் தயார் செய்யப்பட்டு அப்படியே இங்கு கொண்டு வந்து பொருத்திவிடப்படும். இதற்கு பெய்லி பிரிட்ஜ் என்று பெயர்.
நேரு ஸ்டேடியத்தில் உடைந்த பாலத்துக்குப் பதிலாக இதுபோன்ற பெய்லி பிரிட்ஜ் அமைக்கப்படும். அடுத்த 5 நாள்களில் இந்த பாலத்தை ராணுவம் அமைத்துவிடும். பெய்லி பாலம் அமைக்க ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தவேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித்தை பிரதமர் கேட்டுக் கொண்டதையடுத்து, பாலத்தை அமைக்க ராணுவத்தின் உதவியைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
பாலம் அமைக்கப்படும்போது தேவையான உதவிகளை டெல்லி பொதுப்பணித்துறை வழங்கும். வாகன நிறுத்துமிடத்தையும், ஸ்டேடியத்தையும் இணைப்பதற்காக இந்த பாலம் அமையும் என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications