காஷ்மீர் நெருக்கடியைத் தீர்க்க 8 அம்சத் திட்டம்-ப.சிதம்பரம்
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பேச்சுவார்த்தை சமரசக் குழுவில் 2 முதல் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள். இதற்கு முக்கியப் பிரமுகர் ஒருவரை தலைவராக நியமிப்போம். அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள், இளைஞர் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தும்.
ஜம்மு காஷ்மீரில் உடனடியாக அமைதி திரும்பச் செய்ய அங்கு கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர்கள், மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும்.
ஜூன் 11ம் தேதி முதல் நடந்த கலவரத்திற்கும், துப்பாக்கிச் சூடுக்கும் உயிரிழந்த ஒவ்வொவரின் (மொத்தம் 108 பேர்) குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக தரப்படும்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளையும் மறு பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். காஷ்மீரில் கலவரம் தொடர்பாக இதுவரை 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 84 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 110 பேர் போலீஸ காவலில் உள்ளனர். 51 பேர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமே விடப்படுகிறது. இதுதொடர்பாக பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.