பிணத்துக்கு சிகிச்சை... திருச்சி காங்கிரஸ் பிரமுகர் மருத்துவமனை மீது தாக்குதல்
திருச்சி: பிணத்துக்கு சிகிச்சை அளித்து ஏமாற்றி பணம் பிடுங்க முயற்சித்ததாகக் கூறி திருச்சியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர் பொதுமக்கள். இந்த மருத்துவமனை காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே உள்ளது கூகுர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்த 21-ம் தேதி டால்மியாபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். கடந்த 24-ம் தேதி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஏபிசி என்ற தனியார் மருத்துவமனையில் மேல் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ சிசிக்சை மேற்கொள்ள பிரபாகரன் உறவினர்களிடம் ரூ. 3 லட்சம் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், பிரபாகரனின் உறவினர்கள் ரூ. 1 1/2 லட்சம் மட்டும் கட்டிவிட்டு மீதித் தொகையை விரைவில் கட்டிவிடுவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பிரபாகரன் உறவினர்கள், பிரேதத்தை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். அதற்கு மீதி பணத்தை தந்தால் மட்டுமே பிரேதத்தை தர முடியும் என நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் கோபம் அடைந்த பிரபாகரன் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர்.
இந்த ஏபிசி மருத்துவமனை கரூர் (காங்கிரஸ் கட்சி) முன்னாள் எம்.பி. முருகையாவின் மகன் அருணுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.