3 மாதத்திற்குப் பிறகு காஷ்மீர் பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு 170 சிறப்புப் பேருந்துகள்
ஸ்ரீநகர்: கடந்த 3 மாத காலமாக காஷ்மீர் கலவர பூமியாக உள்ளது. பல இடங்களில் ஊர் அடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதிலும் கடந்த 100 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
ஹுரியத் தலைவர் செய்யது அலி ஷா ஜீலானி பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மிகக் குறைவான மாணவர்களே சென்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலக் கல்வி முறையே சீர்குலைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி 17 வயது மாணவன் ஒருவன் போலீசாரின் கண்ணீர் புகை தாக்குதலின்போது உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து இன்று வரை அங்கு கலவரம் அடங்கியபாடில்லை.
பள்ளிகள் ஒழுங்காக நடப்பதற்காக அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
11 வழித் தடங்களில் சுமார் 170க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாணவர்களுக்காக விடப்பட்டுள்ளது. எனினும் இந்த கலவரத்தின்போது மாணவர்களே அதிக அளவில் இறந்துள்ளதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்ப அஞ்சுகின்றனர்.