தமிழர் பகுதிகளை சிங்கள குடியிருப்பாக மாற்றுகிறார்கள் ..! - வைகோ பேட்டி

திருச்சி டி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் எனும் ஓவிய கண்காட்சி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
கண்காட்சியில் இலங்கையில் போரினால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை கூறும் வகையில் 80 ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"ஓவியர் புகழேந்தி உலகின் சிறந்த ஓவியர். கடந்த 27 ஆண்டுகளாக ஓவிய பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இலங்கையில் தாயக பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரைந்த இந்த ஓவியங்கள் சிங்கள அரசின் படுகொலையை நேரிடையாக காட்டுவது போல் உள்ளது.
ஈழத்தமிழர்கள் சர்வதேச அனாதை:
இந்திய அரசின் உதவிகளோடும், வல்லரசு நாடுகளின் உதவியோடும் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதை உணர்த்தும் சித்திரமாக உள்ளது. இந்த ஓவியங்களை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் துக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஓவியங்கள் மூலம் தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஈழ இன ஆதரவு உணர்வை ஏற்படுத்தும். ஈழத்தமிழர்கள் சர்வதேச அனாதையாகி விட்டார்கள்.
இலங்கையில் தமிழர்கள் கலாசாரத்தை தற்போது அடியோடு அழித்து விட்டனர். இந்து கோவில்களில் சிவன், முருகன் சிலைகளை அகற்றிவிட்டு புத்த விக்ரத்தை நிறுவி வருகின்றனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியை அழித்து சிங்கள ராணுவத்தை குடியேற்றி மொத்தத்தில் சிங்கள தீவாக ராஜபக்சே அரசு மாற்றி வருகின்றது.
தியாக தீபம் திலீபன்...
1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி முக்கியமான நாள். 23 ஆண்டுகளுக்கு முன்பு 5 பிரச்சினைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் திலீபன் பரிதாபமாக இறந்தான். அவனது கல்லறைகள் உடைக்கப்பட்டு விட்டன. மாவீரர்களின் கல்லறைகளை சிங்கள அரசு உடைத்து நொறுக்கி உள்ளது. போருக்காக சிந்திய ரத்தங்கள் உறையவில்லை. தியாகங்கள், உயிர்கள் ஒரு போதும் வீண் போவதும் இல்லை.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பான டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன்.
தடையை நீட்டிப்பது ஏன்?
தமிழ் ஈழம் என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாயக பூமியில் விடுதலை கேட்கிறார்கள். தமிழ் ஈழத்தில் தமிழ்நாடும் ஒரு பகுதி என்று ஒருபோதும் புலிகள் . சொ்ச்தில்லை. ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாக கருதுகின்றனர். தமிழகம் வரும் அவர்களுக்கு அகதி என்ற முத்திரை குத்தி முகாமில் அடைக்கின்றனர். நாடு கடத்துகின்றனர். இதே போன்ற செயல்களில் பிறநாடுகளும் ஈடுபடுகிறது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுகின்றனர். அதன் மீது தடையை விதித்துள்ளனர். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஈழத் தமிழர்கள் உலகிற்கு தெரியப்படுத்துவதை தடுத்து நிறுத்தவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளனர். இந்திய அரசு செய்த துரோகங்களை வெளியில் வராமல் தடுக்க பாதுகாப்பு கவசமாக விடுதலைப்புலிகள் மீது தடையை பயன்படுத்தி வருகிறது. ராஜபக்சே கூட்டாளிகளை போர்க்குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தும் வரை தொடர்ந்து பேராடுவோம்.
ஓவியர் புகழேந்தியின் ஓவிய கண்காட்சி தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்டமாக மதுரையில் அக்டோபர் மாதம் 15, 16, 17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு ம.தி.மு.க.துணை நிற்கும்...", என்றார்.












Click it and Unblock the Notifications