தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டம்-ஜெ. ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
தற்போது முதலில் அதிமுக தொண்டர்களை உசுப்பேற்றி, உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கியுள்ளார். இதற்காக முதலில் கோவையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அடுத்து திருச்சியில் நடத்தினார். இதைத் தொடர்ந்து மதுரையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறார். இந்தக் கூட்டங்களில் அதிமுகவினர் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு கிடையாது.
இதையடுத்து கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நேற்று அவரது இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் என்.வரதராஜன், மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் சந்தித்துப்பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் இணைந்து கூட்டுப்போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications