சிறைக் காவலர்களை தாக்கிய கசாப்-ரகசிய கேமராவில் காட்சிகள் பதிவு
மும்பை: சிறைக் காவலர்களை பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தாக்கிய காட்சிகள் ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளன. இதை பாம்பே உயர்நீதிமன்றத்திடம் மகாராஷ்டிர அரசு இன்று சமர்ப்பித்தது.
மேலும், கசாப், அவனது வக்கீல்களுடன் தனி அறையில் வைத்து ஆலோசனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அது கோரியுள்ளது.
கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தும் விசாரணையை பாம்பே உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் ஒரு ரகசியக் கேமராப் பதிவை நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு சமர்ப்பித்தார். இன்று மாலை அந்த வீடியோப் பதிவை பெஞ்ச் பார்வையிடவுள்ளது.
பின்னர் நிகாம், நீதிபதிகளிடம் பேசுகையில்,செப்டம்பர் 1ம் தேதியன்று ஒரு சட்டவிரோதமான காரியத்தில் கசாப் ஈடுபட்டிருந்தான். இதையடுத்து அதைத் தடுக்க முயன்றனர் சிறைக் காவலர்கள். அப்போது, அவர்களை கசாப் தாக்கினான்.
கசாப் ஒரு பயிற்சி பெற்ற கமாண்டோ. அதி விரைவாக செயல்படக் கூடியவன். சிறைக் காவலர்களுக்கு மட்டுமல்லாமல், அவனது உயிருக்குமே கூட அவனால் ஆபத்து உள்ளது.
எனவே கசாப் விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வக்கீல்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்த அனுமதி கோரியுள்ளான் கசாப். இதை ஏற்கக் கூடாது. சிறை அலுவலர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே அவன் தனது வக்கீல்களுடன் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
கசாப்பின் வக்கீல் அமின் சோல்கர் கூறுகையில், சிறைக் காவலர்கள் அல்லது போலீஸார் முன்னிலையில் தனது வக்கீல்களைப் பார்க்க கசாப் விரும்பவில்லை. பல பேர் சூழ்ந்திருக்கும் நிலையில் வக்கீல்களுடன் பேச அவனுக்கு அசவுகரியமாக இருக்கிறது என்றார்.
தனியாக ஆலோசிக்க அனுமதி கோரியுள்ள கசாப்பின் கோரிக்கை மற்றும் சிறைக் காவலர்களை தாக்கிய விவகாரம் குறித்து நாளை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications