மெக்சிகோவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 1,000 பேர் பலி!
சான்டா மரியா (மெக்சிகோ): மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட மலை-நிலச் சரிவில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அங்குள்ள மலைப்பகுதியின் பல இடங்களில் மண் சரிந்து விழுந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் ஓக்சாகா மாகாணத்தில் இன்று திடீரென்று மலைச்சரிவு ஏற்பட்டது.
இதில் சான்டா மாரியா ட்லாய்ட்லோபெக் மலைப் பகுதியில் இருந்த 300-க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதனால் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 1000-த்திற்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்து இறந்துவிட்டதாக அந்த மாகாண கவர்னர் லைசிஸ் ரவுசி தெரிவித்து உள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத வகையில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.