தூத்துக்குடி: ஓடும் பஸ்ஸை காரில் வழிமறித்து வியாபாரிகளிடம் 8 கிலோ நகை கொள்ளை
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்ஸை வழிமறித்த காரில் இருந்த கும்பல் பஸ்சில் இருந்த நகை வியாபாரிகளிடம் இருந்து 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
சென்னை சவுகார்பேட்டை யானைக்கவுனி தெருவை சேர்ந்த மகேந்திர சிங் (25), ஜெகன் சிங் (31), காந்திலால் (52) ஆகியோர் ஒரு தனியார் நகைக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தென் மாவட்ட நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்ய சென்றனர். தூத்துக்குடியில் சில கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்த அவர்கள் அங்கிருந்து மதுரை செல்ல கம்பம் செல்லும் பஸ்சில் ஏறினர்.
நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் அந்த பஸ் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், பஸ்சை முந்திச் சென்று, குறுக்கே நின்றது.
இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் பஸ்சுக்குள் ஏறி நகை வியாபாரிகள் வைத்திருந்த பைகளை பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிவிட்டது.
அந்த பைகளில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இந்தக் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணித்த நகை வியாபாரிகளே, இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications