அயோத்தி தீர்ப்பை வைத்து மத்திய அரசு அரசியல் செய்யாது-ப.சிதம்பரம்
அயோத்தி தீர்ப்பு குறித்து இன்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்புக்கு நாட்டு மக்கள் காட்டிய அமைதியான வரவேற்பு மிகவும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகும். அயோத்தி தீர்ப்பை மக்கள் மிகவும் கெளரவமான முறையில் எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை மக்கள் மதித்து அமைதி காத்துள்ளது பாராட்டுக்குரியது. மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும், நீதிமன்ற தீர்ப்பையும் மதித்து மக்கள் அமைதி காத்தனர்.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யப் போவதாக உரியவர்கள் அறிவித்துள்ளனர். அது இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக உள்ளது. எங்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் சில காலத்திற்கு நீடிக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்கும், அயோத்தி தீர்ப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அயோத்தி தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை.
அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மீடியாக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு செய்தி வெளியிடுகின்றன. அது தேவையற்றது. அதைத் தவிர்க்க வேண்டும்.
அயோத்தி தீர்ப்பை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. அப்படிப்பட்ட செயலை மத்திய அரசு ஒருபோதும் செய்யாது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் தற்போதையே நிலையே இப்போதைக்கு நீடிக்கும் என்றார் சிதம்பரம்.