திமுகவுக்கு எதிராக அலை-இந்திய கம்யூனிஸ்ட், பாஜக
கந்தர்வகோட்டை& அறந்தாங்கி: தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டு இலவசம், இலவசம் எனக் முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இந்த முறை தமிழ்நாட்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படுவது கருணாநிதியின் குடும்ப பணத்தில் அல்ல; மக்களின் வரிப் பணத்தில். ஆனால், இப்படி இலவசமாக அளிக்கப்படும் தொலைகாட்சிப் பெட்டிக்கான கேபிள் இணைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் முதல்வர் கருணாநிதி குடும்பத்தையே சென்றடைகிறது.
ஓர் இணைப்புக்கு ரூ.100 என வைத்துக்கொண்டாலும் தமிழகத்திலுள்ள 60 லட்சம் கேபிள் இணைப்புகளின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?.
வரும் தேர்தலில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். முதல்வர் கருணாநிதியோ வரும் தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெறலாம் எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சி நீடித்தால் ஜனநாயகமே அழிந்து போய்விடும். இதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். கடந்த தேர்தலிலே திமுக வலுவான கூட்டணியை அமைத்தும் 91 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால், இப்போது சூழலே வேறு.
அன்று திமுகவுடன் இருந்த கட்சிகள் பலவும் இப்போது அதிமுகவோடு இணைந்து நிற்கின்றன. ஆகையால், அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார் பாண்டியன்.
திமுகவுக்கு எதிராக அலை-பாஜக:
பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச். ராஜா அறந்தாங்கியில் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளதைத் தெளிவாக உணர முடிகிறது.
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் முறை பென்னகரத்திலேயே எடுபடவில்லை. அங்கு இவ்வளவு செலவழித்தும் திமுக 45 சதவீத வாக்குகளையே பெற்றது. எதிர்கட்சிகள் வாக்குகள் சிதறியதாலேயே அங்கு திமுக வெற்றி பெற்றது.
ஆகவேதான் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தால் தோல்வி அடைவோம் எனக் கூறி கூட்டணி மாற வேண்டும் என இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகப் பேசி வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications