எட்டையபுரம் அருகே 8 கிலோ நகைக் கொள்ளை: கொள்ளையர்களைப் பிடிக்க மேலும் 2 தனிப்படை
தூத்துக்குடி: எட்டையபுரம் அருகே 8 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங், சஜன்சிங் ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து நகைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது எட்டையபுரம் அருகே காரில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவர்களிடம் இருந்த 8 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல இடங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர நகைகளை பறிகொடுத்த மூன்று ஊழியர்களிடமும் எட்டையபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போன்களில் பதிவான எண்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் வந்த சிவப்பு நிற காரின் பதிவு எண் போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அது திருட்டு காராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கார் திருட்டு தொடர்பாக பதிவான புகார்களை சேகரித்து விசாரிக்கின்றனர். நகைக் கடை ஊழியர்களை கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்திருக்கக்கூடும் என்றும், சென்னையில் இருந்தே அவர்கள் நகைக் கடை ஊழியர்களை பின் தொடர்ந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இது தவிர சென்னை நகைக் கடையில் வேலை பார்த்தவர்கள் யாராவது கடந்த சில மாதங்களில் வேலையை விட்டு நின்றார்களா என்பது குறித்து கடை உரிமையாளர் அசோக்குமார் சிங்கிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. நகைகளை பறிகொடுத்த 3 ஊழியர்கள் எட்டயபுரத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.