ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி இளம்வழுதி
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள் என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. அதில் பேசிய பரிதி,
இங்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், நான் எங்கு சென்றாலும், 'நான் பெரியாருடைய ப்ராடக்ட்' என்பதை மறவாமல் பெருமையாக சொல்லுகிறேன் என்று என்னை பாராட்டினார்.
அம்மையார் ஆட்சியிலே சட்டமன்றத்திலே நடைபெற்ற அராஜகத்தை நான் தனி ஒரு திமுக உறுப்பினராக இருந்து சமாளித்ததை இங்கே எடுத்துச் சொன்னார்.
அந்த அராஜகத்தை, கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்றால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார்.
நான் பேண்ட் போட்டிருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். பேண்ட் போட்டிருப்பது ஒன்றும் புதுமையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள்.
அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1,800ம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி நிறைவு செய்வதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சிலர் நன்றாக எழுதுவார்கள்; ஆனால் அவர்களுக்குப் பேச வராது. ஆனால், நல்ல கருத்தாழம் மிக்க அப்படிப்பட்டவர்களை மேடையில் பல பேச்சாளர்களை உருவாக்கிய இடம் இந்த இடம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்கள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள் என்றார்
கூண்டுக்கள் மனிதர்கள்-வீரமணி:
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேசுகையில்,
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1800 நிகழ்ச்சிகளை விடாமல் நடத்தி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பேச்சாளர்களைத் தொடர்பு கொண்டு, எத்தணை சங்கடங்கள் வந்தாலும், விடாமல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற பெரியார் நூலக வாசகர் வட்டத்தைச் சார்ந்த அத்தணை தோழர்களையும் பாராட்டுகின்றேன்.
நம்முடைய நிலை எப்படியிருக்கிறது என்றால், வழக்கமாக புலி கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை என்னவென்றால், மனிதர்கள் கூண்டிற்குள் இருக்கிறார்கள். புலிகள் கூண்டிற்கு வெளியில் நின்று மனிதர்களை உறுமலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அயோத்தி பிரச்சனையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது நம்பிக்கையின் அடிப்படையில், அதாவது இந்த இடம் என்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான இடம். என் பாட்டி என் வீட்டில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு சொன்னார்கள். இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம். காரணம், நம்பிக்கை என்று சொன்னால், இதை ஏற்க முடியுமா?.
நான் நம்புகிறேன், அவ்வளவுதான். விவாதத்திற்கே இடம் இல்லை என்று சொன்னால், அறிவுபூர்வமாக இதை ஏற்க முடியுமா?.
இன்றைக்கு அண்ணா அவர்கள் ஆட்சியில் இருந்து செய்த பணியை, முதல்வர் கருணாநிதி, அடுத்த கட்டப் பணிகளை நோக்கி ஆட்சிச் சக்கரத்தை சுழலவிட்டுக் கொண்டிருக்கிறார். பார்ப்பனீயம் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்தப் பரம்பரை யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications