ராஜபக்சேவிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அனோமா பொன்சேகா
கொழும்பு: எனது கணவரோ அல்லது நானோ, ராஜபக்சேவிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகாவின் மனைவி அனோமா.
விடுதலைப் புலிகளுடன் நடந்த போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர், அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த பொன்சேகாவை கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்தது ராஜபக்சே அரசு. அவரும், அவரது தம்பி கோத்தபயாவும் சேர்ந்து பொன்சேகாவை ஓரம் கட்ட ஆரம்பித்தனர். இதனால் வெகுண்ட பொன்சேகா, ஓய்வுக்குப் பின்னர் அரசியலில் குதித்தார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். அடுத்த நிமிடமே அவரை கைது செய்து விட்டனர்.
ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதில் முறைகேடு செய்தார் என்று கூறி ஒரு வழக்கும், வேறு சில வழக்குகளும் ராணுவ கோர்ட்டில் தொடரப்பட்டது. இதில் ஆயுத ஊழல் வெழக்கில் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தற்போது சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர்.
கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா மன்னிப்பு கேட்டால் அவரை மன்னித்து விடுதலை செய்ய அதிபர் பரிசீலிப்பார் என்று கோத்தபயா கூறியுள்ளார்.
இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், பொன்சேகா மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானதல்ல. இதனால் இந்த விவகாரத்துக்கு போராட்டத்தின் மூலமோ, மூன்றாம் நபரின் தலையீட்டு மூலமோ தீர்வு காண முடியாது.
பொன்சேகா தனக்கு அளிக்கப்பட்டுள்ள 30 மாத சிறைத்தண்டனையை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தால் அதை பரிசீலிக்க அதிபர் தயாராக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
ஆனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியுள்ளார்.
கணவரைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொன்சேகா உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் மன்னிப்புக் கோரலாம். அவர் நிரபராதி என்கிற போது ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். பொன்சேகாவின் மீதான நடவடிக்கை அரசியல் நோக்கமுடையது.
அதிபர் ராஜக்சேவின் விருப்பத்துக்கு இணங்க பொன்சேகாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அனோமா.












Click it and Unblock the Notifications