அண்ணா நூலகத்தில் 'நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்' வெடித்ததால் பரபரப்பு
சென்னை: சமீபத்தில் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பிரமாண்ட அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 மாடிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் தற்போது 3 மாடிகள் மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டு திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற தளங்கள் இன்னும் முடியவில்லை. வேலைகள் நடந்து வருகின்றன.
நேற்று 5வது தளத்தில் வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென பெரும் வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து அஹ்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர். வெடிகுண்டு வெடித்து விட்டதோ என்று பீதி ஏற்பட்டது
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்டோரும் விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்தில் தீவிரமாக ஆராய்ந்தபோது நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் என்ற டெட்டனேட்டர் வெடித்தது தெரிய வந்தது. இந்த டெட்டனேட்டர், பாறைகளை பிளக்கும்போது பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைக்க உதவும் பூஸ்டராக செயல்படுவது ஆகும்.
இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது 25 டெட்டனேட்டர்களைக் கொண்ட பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உடனடியாக அங்கிருந்துஅப்புறப்படுத்தி வேறு இடத்திற்குக் கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர். மேலும் ஜெலட்டின் குச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், மாலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு சிறு விபத்துதானே தவிர பெரிய சம்பவம் அல்ல. இதில் எந்த சதித்திட்டமும் இல்லை. இந்த பொருளை நான்-எலக்ட்ரிக் டெட்டனேட்டர் என்று அழைப்பார்கள்.
பாறை போன்றவற்றை வெடிக்கச் செய்வதற்கு, இதனை ஜெலட்டின் குச்சியோடு இணைத்தால், பெரிய அளவில் அந்த ஜெலட்டின் குச்சியை இது வெடிக்கச் செய்யும். ஆனால், இந்த டெட்டனேட்டர் கீழே விழுந்தாலும், காலில் மிதிபட்டாலும் வெடிக்கக்கூடியது.
இந்த பொருளின் மீது அங்கு நடந்து கொண்டிருந்த வெல்டிங் பணியினால் ஒரு தீப்பொறி பறந்து வந்து எதேச்சையாக இதன் மீது விழுந்துள்ளது. இதனால்தான் வெடிப்பு ஏற்பட்டு என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது.
இருப்பினும், இந்த டெட்டனேட்டர்களை யார், எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது பற்றி, கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்களிடம் விசாரித்து வருகிறோம்.
பொதுமக்கள் நூலகத்திற்கு வரலாம். அதில் அவர்களுக்கு எந்தத் தடங்கலும் இல்லை என்றார்.
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திற்குள் டெட்டனேட்டர்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.