கொச்சி வழியாக சென்னைக்குக் கடத்தப்பட்ட ரூ. 30 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள்
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையம் மூலமாக சென்னைக்கு கேரளாவிலிருந்து ரூ. 30 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கடந்த நான்கு மாதங்களில் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை மீட்கவும், அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு வேனை கொச்சி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது.
விசாரணையில் அவை சிங்கப்பூரில் இருந்து கொச்சி விமானநிலையம் வழியாக சென்னைக்கு கடத்தப்பட்டது தெரிய வநதது. இது தொடர்பாக இளையான்குடியை சேர்ந்த செய்யது சீராஜீதின் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கொச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதத்தில் மட்டும் கொச்சி விமான நிலையம் வழியாக ரூ.30 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த கடத்தலுக்கு விமான நிலையத்தில் உள்ள சுங்க துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கதுறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.