ஜோதி பாசு பெயரில் இலவச மருத்துவமனையைத் திறந்தார் சோம்நாத் சாட்டர்ஜி

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் சோம்நாத் சாட்டர்ஜி. ஓய்வு முடிவை அறிவித்தபோது தான் இனி சமூக சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த சேவையை அவர் தொடங்கியுள்ளார்.
தனது குருவான ஜோதிபாசுவின் பெயரில் ஜோதிபாசு சேவா கேந்திரா என்ற இலவச மருத்துவ மையத்தை அவர் ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தீவிர அரசியலுக்கு எனது வயது இனியும் ஒத்துக் கொள்ளாது. அரசியலிலிருந்து ஓய்வு பெறும்போது சமூக சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்தேன். தற்போது அதை தொடங்கியுள்ளேன்.
சாதாரண மக்களுக்காக உழைக்க ஆர்வமாக உள்ளேன். அதன் முதல் படிதான் இந்த இலவச மருத்துவ மையம்.
ஏழை, எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும் இந்த மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளவர் ஜோதிபாசுதான். அவர்தான் எனது உந்து சக்தியாக இருந்தவர். எனவேதான் அவரது பெயரை மருத்துவமனைக்கு சூட்டியுள்ளேன் என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.
காந்தி ஜெயந்தியான நேற்று இந்த இலவச மருத்துவ மையம் தொடங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications