தனித்து போட்டியிட நாங்கள் தயார்-திமுக தயராரா?: ஓ. பன்னீர்செல்வம் சவால்
விருதுநகர் கந்தசாமி- ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்திற்கு அவைத் தலைவர் மருது தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், கொள்கைபரப்பு செயலாளர் மு.தம்பித்துரை, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது
கருணாநிதி அரசு மின்சார பற்றாக்குறை, விலை வாசி உயர்வு ஆகியவற்றை சரி செய்யாமல் இருந்ததால் மக்கள் பெரும் வேதனையில் உள்ளனர். இந்த வேதனையே அவர்களுக்கு தேர்தலில் பாடம்புகட்டும்.
கோவை, திருச்சி ஆகிய இடங்களில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் திரண்ட மக்கள் ஜெயலலிதாவின் சுய விளம்பரத்திற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்கின்றனர். ஆனால், கருணாநிதி இதற்கு போட்டியாக நடத்திய கூட்டங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது.
காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் அக்டோபர் 18 ம் தேதி முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட தயாரா? தங்களது பண பலம், ஆள்பலம், அதிகாரபலத்தை காட்டினாலும் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.