பாக். தீவிரவாதி கசாப் புனே சிறைக்கு விரைவில் மாற்றம்
புனே: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீன் கசாப்பை, புனே, மரத்வாடா சிறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் 2 மாதங்களில் அவனை புனே சிறைக்கு மாற்றி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
புனே கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள எரவாடா சிறையில் கசாப் அடைக்கப்படவுள்ளான்.
தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். அவனுக்காகவே பிரத்யேகமாக வெடிகுண்டு வீச்சில் தகர்க்கப்பட முடியாத, குண்டு துளைக்காத அறையை கட்டி அங்கு அடைத்துள்ளனர்.
மிக பலத்த பாதுகாப்புடன் கூடிய இந்த சிறையிலிருந்து தற்போது கசாப்பை மாற்றவுள்ளனர். மும்பையில் அமைக்கப்பட்டு வரும் மோனோரயில் திட்டமே இதற்குக் காரணம். சிறை உள்ள பகுதியில் தற்போது இந்த ரயில் பாதை வருகிறது. ரயில் பாதையிலிருந்து பார்த்தால் சிறையை நன்றாக பார்க்க முடிகிறது. இது ஆபத்தானது என்பதால், கசாப்பை புனே சிறைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், ஆர்தர் சாலை சிறையில், விசாரணைக் கைதிகளைத்தான பெரும்பாலும் அடைப்பார்கள். தற்போது கசாப் தண்டனைக் கைதி ஆவான். எனவே தொடர்ந்து இங்கு அவனை வைத்திருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. எனவேதான் புனேவுக்கு மாற்றவுள்ளனர்.
புனே, மரத்வாடா சிறையில் உள்ள ஒரு சிறப்புப் பிரிவை மேம்படுத்தி அதை எந்த வகையான தாக்குதலையும் சமாளிக்கும் வகையிலான அறையாக மாற்றவுள்ளனர். அதன் பின்னர் அந்த சிறைக்கு கசாப் மாற்றப்படுவான்.
கசாப்பைப் பாதுகாக்க அரசு பல லட்சங்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.