காவலர் தேர்வு-உயரத்தைக் கூட்டிக் காட்ட தலையில் பசை தடவி வந்த வாலிபர்
நெல்லை நெல்லையில் காவலர்களுக்கான முதல் கட்ட உடல் திறன் தேர்வு இன்று துவங்கியது. அப்போது உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக தலையில் பசை தடவி வந்த வாலிபர் பிடிப்பட்டார்.
நெல்லையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், (ஆண், பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2306 ஆண் மற்றும் 1001 பெண்களுக்கான முதற்கட்ட உடல் திறன் தேர்வு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
நேற்று நடந்த தேர்வில் 800 ஆண்கள், கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு, ஓட்டம் ஆகியவை நடந்தன. சென்னை டிஐஜி சஞ்சய் மத்தூர், நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் மேற்பார்வையில், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
தேர்வுகளை பதிவு செய்ய சுழற்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் காலை 6 மணிக்கு மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்க வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது உயரம் குறைவாக இருக்க கூடாது என்பதற்காக தலையில் பசை தடவி வந்தார். இதனை பார்த்த எஸ்பி ஆஸ்ரா கர்க் அவரை பிடித்து வெளியே நிறுத்தினார். அதன்பிறகு அவர் தேர்வுக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
இதே போல் வேறொருவரின் போட்டோவை ஓட்டி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலை சேர்ந்த வாலிபரும் பிடிபட்டார்.












Click it and Unblock the Notifications