கழன்று ஓடிய சேரன் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள்-பேரபாயத்திலிருந்து தப்பிய பயணிகள்
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பீதி ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவையில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை 4.45 மணிக்கு அரக்கோணம் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.
அங்கிருந்து 2 நிமிடம் கழித்து ரயில் சென்னைக்குக் கிளம்பியது. ரயில் சிறிது தூரம் சென்ற நிலையில், திடீரென எஸ்.1 பெட்டியின் கீழிலிருந்து பலத்த சப்தம் கேட்டது. அடுத்த விநாடி, ரயிலின் முதல் எட்டு பெட்டிகளிலிருந்து மீதமிருந்த 14 பெட்டிகளும் இணைப்பு துண்டிக்கப்பட்டு தனியாக பிரிந்தன.
இதையடுத்து அந்தப் பெட்டிகள் அங்கேயே நின்று விட்டன. ரயிலிலிருந்து திடீரென சத்தம் கேட்டதால் கார்டு வெளியில் எட்டிப் பார்த்தார். அப்போதுதான் ரயில் இரண்டாக பிரிந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் வெளியில் எட்டிப் பார்த்து என்ன நடந்தது என்றுதெரியாமல் பெரும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
என்ஜினுடன் எட்டு பெட்டிகளை மட்டும் கொண்டு ரயில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த கார்டு, டிரைவருக்குத் தகவல் கொடுத்தார். அதே சமயத்தில் டிரைவரும் வெளியில் பார்த்து ரயில் பிரிந்திருப்பதை அறிந்தார். இதையடுத்து ரயிலை நிறுத்தினார்.
அதற்குள் ரயில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போயிருந்தது. பின்னர் ரயில் நிலையத்திற்குத் தகவல் போனது. அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், அதிகாரிகளும், விரைந்து வந்தனர்.
என்ன நடந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது எஸ்1 பெட்டியில், ரயில் பெட்டியை இணைக்கும் இணைப்பு சேதமடைந்து துண்டித்து கீழே விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெட்டியை மட்டும் தனியாக பிரித்து அப்புறப்படுத்தினர். எஸ் 1 பெட்டியில் இருந்த பயணிகள் எஸ் 3க்கு மாற்றப்பட்டு பின்னர் பிரிந்து போன பெட்டிகள், ரயிலுடன் இணைக்கப்பட்டு அதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த பெரும் குழப்பம் காரணமாக இரண்டு மணி நேரம் தாதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
ரயில் புறப்பட்ட உடனேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் அதி வேகமாகப் போய்க் கொண்டிருந்தபோது நடந்திருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.