சென்னை கடத்தல் கும்பலுக்கு உடந்தை-2 கொச்சி விமான நிலைய அதிகாரிகள் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கொச்சி வழியாக சென்னைக்கு ரூ.30 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தப்பட்டது தொடர்பாக கொச்சி விமான நிலைய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 கோடி மதிப்புள்ள கடத்தல் எலக்ட்ரானிக் பொருட்களை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் கடந்த 3 தினங்களாக விடிய விடிய அதிகாரிகள் சோதனை நடந்தது. அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பயணிகள் போல சிங்கபூர் செல்லும் ஆசாமிகள் எலக்ட்ரானிக் பொருட்களை அங்கிருந்து கடத்தி வந்து சுங்கத் துறை ஊழியர்களின் ஓத்துழைப்போடு வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்தில் மட்டும் சிங்கபூர், துபாய், ஆகிய நாடுகளில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த இப்ராகீம், அப்துல் கரீம், பாஷா மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஆகிய 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து கொச்சி வருவாய் புலனாய்வு அதிகாரிக் நடத்திய விசாரணையில் அங்குள்ள விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கிவிட்டு கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் பிரசாந்த், டிஎஸ் பிள்ளை ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.