திருச்சி சோனியா கூட்டம்: இடம் தேர்வு செய்வதில் காங்கிரசில் கோஷ்டி மோதல்
திருச்சி: திருச்சியில் சோனியா காந்தி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்துக்கு இடம் தேர்வு செய்வதில் தங்கபாலுவுக்கும், இளங்கோவன் மற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுடன் முறைப்படி காங்கிரஸில் இணைகிறார்.
இந்தக் கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக சென்ற மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திருச்சிக்கு வந்தபோது, திருச்சி நகர காங்கிரஸ் தலைவரும், இளங்கோவனின் ஆதரவாளருமான ஜெரோம் ஆரோக்கியராஜு்க்கும் தங்கபாலுவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதால் தங்கபாலு நடத்த இருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ரத்தானது. இளங்கோவனின் ஆதரவாளர்கள் தங்கபாலுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்தனர்.
இந் நிலையில் மீண்டும் பொதுக் கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்வதற்காக இன்று காலை திருச்சி வந்தார் தங்கபாலு. திமுக பொதுக் கூட்டம் நடத்தப்பட்ட ராணுவ மைதானத்தைப் பார்வையிட திருச்சி போலீஸ் கமிஷ்னர் வன்னியபெருமாளுடன் சென்றார்.
காங்கிரஸ் பொதுக் கூட்டத்தையும் இங்கேயே நடத்துவது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜெரோம் மாணிக்கராஜ் மற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளரும் தொட்டியம் எம்.எல்.ஏவுமான ராஜசேகர் இருவரும் திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என்றனர்.
தங்கபாலு ராணுவ மைதானத்தில் நடத்தலாம் என்று கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, ரயில்வே மைதானத்திற்கு ஒரு வழிதான் உள்ளது. இதனால் தொண்டர்கள் வந்து செல்வது சிரமம். ராணுவ மைதானம் தான் கூட்டம் நடத்துவதற்கு வசதியானது என்று விளக்கினர்.
இதையடுத்து அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications