பஞ்சு ஏற்றுமதியில் மத்திய, மாநில அரசு இரட்டை வேடம்-சிபிஎம் கண்டனம்
நாகர்கோவில்: பஞ்சு ஏற்றுமதி விவகாத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இரட்டை வேடம் போடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தனியார் பள்ளிகளில் கட்டணம் தொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிக்கையை அரசு உடனடியாக அமல் படுத்தியிருந்தால் இந்த பிரச்னை கோர்ட்டுக்கு சென்றிருக்காது. இப்போது பள்ளிகளில் பெற்றோர்கள் போராட்டம் நடத்தும் நிலையும் வந்திருக்காது. நீதி கேட்டு போராடும் பெற்றோர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பஞ்சு ஏற்றுமதி பிரச்னையில் மாநில அரசும், மத்திய அரசும் இரட்டை வேடம் போடுகிறது. பஞ்சு ஏற்றுமதி என்று சொன்ன உடனேயே நூல் விலை உயர்ந்து விட்டது. திருப்பூரில் நூல்விலை காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவை போல பொது விநியோக திட்டத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்க அரசு முன்வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள குழு அறிக்கும் பரிந்துரையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போன்று, நெய்யாறு இடதுகரை சானல் பிரச்னையை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டு வரும் கொலை மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மக்கள் பிரச்னைக்காக மார்க்சிஸ்ட் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துகிறது. இதில் தே.மு.தி.க -வும் பங்கேற்க வேண்டும் என்றார்.