தீபாவளி, நவராத்திரியின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-உளவுப் பிரிவு எச்சரிக்கை
நவம்பர் 5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதேபோல நவராத்திரி பண்டிகை வருகிற 8ம் தேதி தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் இறுதிப் பகுதியாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா ஆகியவை கொண்டாடப்படும். மேலும் ராம் லீலாவும் வருகிறது.
இந்த விழாக்கள் அனைத்தும் நாடு முழுவதும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து இந்த இரண்டு மாதமும் நாடு முழுவதும் மக்கள் பொருட்கள், புதுத் துணிமணிகள் வாங்குவதற்காக கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பெருமளவில் கூடுவர்.
இதைப் பயன்படுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், முன்பு இந்தியாவுக்கு வந்து உளவு பார்த்துச் சென்ற டேவிட் கோல்மேன் ஹெட்லி எங்கெல்லாம் போனானோ அங்கெல்லாம் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெட்லி, முன்பு இந்தியா வந்தபோது டெல்லி, ஆஜ்மீர், புனே ஆகிய நகரங்களில் தங்கியிருந்தான். எனவே இந்த மாநிலங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கோவா மாநிலத்திற்கு பெருமளவில் வெளிநாட்டினர் வருவதால்அங்கும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே காமன்வெல்த் போட்டியின்போது தீவிரவாத செயல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் எச்சரித்துள்ளால் டெல்லியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்டிகைகளைப் பயன்படுத்தி தீவிரவாத செயல்கள் நடைபெறக் கூடும் என்ற புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.