''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''!
மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர்.
ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது.
சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த கிணற்றை சட்ட விரோதமாக மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த செயலை மறைக்க, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயச்சி செய்து வருகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காணாமல் போய் விட்ட பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.