குமரி-லால்குடியில் பஸ் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பயணிகள் தவிப்பு
நாகர்கோவில் & திருச்சி: அரசு பஸ் டிரைவர் வெட்டப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் செல்வம் (37). இவர் பெருவழிகடவில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் பஸ்சை ஓட்டி சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறி செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து நாகர்கோவில் ராணித்தோட்டம், குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய இடங்களில் உள்ள அரசு பஸ் டெப்போக்களுக்கு நேற்று காலை வந்த ஊழியர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ்கள் இயங்காமல் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
டிரைவர் செல்வத்தை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் அறிவித்த பின்னரே ஊழியர்கள் பஸ்களை இயக்கினர்.
கண்டக்டரை டிக்கெட் பரிசோதகர் தாக்கியதால் ஸ்டிரைக்:
இதற்கிடையே லால்குடி அருகே கண்டக்டரை டிக்கெட் பரிசோதகர் தாக்கியதை கண்டித்து பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மக்களை வதைத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக லால்குடி டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து களத்தில் வென்றார்பேட்டை என்ற ஊருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
லால்குடி அருகே அந்த பஸ் சென்றபோது டிக்கெட் பரிசோதகர்கள் சந்திரசேகரன், மோகன் ஆகியோர் அந்த பஸ்சில் ஏறி சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பயணியிடம் பழைய டிக்கெட் இருந்தது. இதைத் தான் கண்டக்டர் தந்ததாக அந்த பயணி கூற, அதை கண்டக்டர் மறுத்தார்.
கூறினார்.
இதையடுத்து கண்டக்டர் தட்சிணாமூர்த்திக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தட்சிணாமூர்த்தி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் தட்சிணாமூர்த்தியை டிக்கெட் பரிசோதகர் தாக்கிவிட்டதாகக் கூறி பஸ் கண்டக்டர்கள் டிரைவர்கள் மருத்துவமனையில் கூடினர். பஸ்களை இயக்க மறுத்தனர்.
இதனாலம மக்கள் பஸ்கள் இல்லாமல் 3 மணி நேரம் தவித்தனர். டிக்கெட் பரிசோதகர் சந்திரசேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னரே ஊழியர்கள் போராட்டத்தை கைவுட்டு பஸ்களை இயக்கினர்.












Click it and Unblock the Notifications