ஏசி மெஷின் வெடித்து வீடு தீப்பிடித்து தம்பதி பலி!
சென்னை: இரவில் ஏசி மெஷின் வெடித்து தீப்பற்றியதில் கணவன், மனைவி இருவரும் தீயில் கருகி பலியாயினர்.
பலியான பெண் ஒரு காலத்தில் மும்பையை கலக்கிய வரதராஜ முதலியாரின் மகள் ஆவார்.
ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ 2வது தெருவில் ஹேமச்சந்தர் (60), அவரது மனைவி மகாலட்சுமி (50) ஆகியோர் வசித்து வந்தனர். ஹேமச்சந்தர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஹேமச்சந்தரும், மகாலட்சுமியும் தங்களுக்கு சொந்தமான பங்களாவில் மேல் மாடியில் குடியிருந்தனர். கீழ் பகுதியை வாடகைக்கு விட்டிருந்தனர்.
இந்தத் உதயசந்தர், பவித்ரா என்ற மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
ஹேமச்சந்தர், மகாலட்சுமியும் இங்கு தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக இரண்டு வேலைக்காரப் பெண்கள் வீட்டில் இருந்தனர்.
மகாலட்சுமிக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்ததால் அவர் பெரும்பாலும் படுக்கையிலேயே இருந்து வந்தார்.
நேற்றிரவு முதல் மாடி படுக்கை அறையில் ஹேமச்சந்தரும், மகாலட்சுமியும் தூங்கிக் கொண்டிருந்தனர். சமையல் அறையில் இரண்டு வேலைக்கார பெண்களும் தூங்கினர்.
நள்ளிரவு 12.50 மணியளவில் ஹேமச்சந்தர், மகாலட்சுமி படுத்திருந்த அறையிலிருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதை கேட்டு விழித்துக் கொண்ட வேலைக்காரப் பெண்களான சொக்கம்மாள் மற்றும் ராமக்கன்னி ஆகியோர் ஓடி வந்தனர்.
அப்போது அந்த அறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்களால் தம்பதி தூங்கிக் கொண்டிருந்த அறையை கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மைலாப்பூரிலிருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து புகையை வெளியேற்றி உள்ளே சென்று பார்த்த போது, ஹேமச்சந்தரும் மகாலட்சுமியும் படுக்கையிலேயே எரிந்து கிடந்தனர்.
போலீசா் உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மின் கசிவு காரணமாக ஏ.சி மெஷின் வெடித்தது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை சிட்லப்பாக்கத்தில் ஏ.சி மெஷின் வெடித்து தாயும், குழந்தையும் பலியானது நினைவுகூறத்தக்கது.
நேற்று தீயில் கருகி உயிரிழந்த மகாலட்சுமி, பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையைக் கலக்கிய வரதராஜ
முதலியாரின் மகள் ஆவார்.












Click it and Unblock the Notifications