மதுரையில் ரூ. 85 கோடியில் நவீன காய்கறி மார்க்கெட்-அழகிரி அறிவிப்பு
மதுரை: மதுரையில் விரைவில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் நவீன காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் என்று மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது, பொதுமக்களை சந்தித்த வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மிகவும் நெருக்கடியான இடத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டை மாற்றி, வேறொரு இடத்தில் அனைத்து நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்கூடிய நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைத்துத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
நான், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்பு மதுரை மாவட்டத்தில் உள்ள தென்பகுதி விவசாயிகளுக்காகவும், வியாபாரிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் சுகாதாரமான, காற்றோட்டமான அனைத்து வசதிகளுடன், நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மார்க்கெட்டினை அமைத்துத்தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, அது தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.85 கோடி செலவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டிற்கும் இடையே உள்ள சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதி களுடன்கூடிய நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தற்போது ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. காய்கறி மார்க்கெட்டிற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, வரும் 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்தப் பணிகளை முடிப்பதற்காக மீதமுள்ள ரூ.55 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
இதனால், தென் மண்டல விவசாயிகளின் நீண்டநாள் கனவாகிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காய்கறி மார்க்கெட் தொடங்கப்படும். அதன் மூலம் ஒரே இடத்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை சேகரிக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யலாம். நுகர்வோருக்கு தரமான காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் கிடைக்கும். குளிர்சாதன சேமிப்பு வசதியுடன் இந்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications