சிறுமி பிரியதர்ஷினி மட்டு கொலை வழக்கு-குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 14 வயது சிறுமி பிரியதர்ஷினி மட்டு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சந்தோஷ் குமார் சிங்குக்கு அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்புக்கு மட்டுவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டக் கல்லூரியில் படித்து வந்தவர் சந்தோஷ்குமார் சிங். இவர் சிறுமி பிரியதர்ஷினி மட்டுமை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இவருக்கு கீழ்க் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து சந்தோஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சில விஷயங்கள் சிங்குக்கு சாதகமாக இருப்பதால் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக உத்தரவிட்டனர்.
அதேசமயம், சந்தோஷ் குமார் செய்த தவறுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தாங்கள் நிலைநிறுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன்தான் இந்த சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தண்டனை குறைப்புக்கு மட்டுவின் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.