தமிழகத்தில் மழை-கேரளாவிலும் அடை மழை-கொல்லத்தில் வெள்ளம்
சென்னை/கொல்லம்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கேரளாவிலும் பெய்து வரும் தொடர் மழையால் கொல்லத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழைவிரைவில் பெய்யத் தொடங்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கேரளாவில் தொடர் மழை
கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையி்ன் தீவிரம் குறைந்து சில இடங்களில் மட்டும் பருவ மழை பெய்வதுண்டு.
ஆனால் இந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய நிலையிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் 6வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் நேற்றும், இன்றும் இடைவிடாது பெய்த மழை வெள்ளம் புகுந்ததில் 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கேரள அமைச்சர் பிகே குருதாசன், கொல்லம் மாவட்ட ஆட்சியர் தெய்வேந்திரன் மற்றும் அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். உரிய நிவாரணண் வழங்குவதற்கு உறுதியளித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் பணி பாதிப்பு
கேரள மாநிலத்தில் வரும் 23, 25 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 80 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது. இப்பதவியில் போட்டியிடுவதற்கு ஆளும் கம்யூ கட்சியும், எதிர்கட்சியான காங்கிரசும் கடும் போட்டியில் களத்தில் உள்ளன.
இப்பதவிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கி 4ம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து விட்ட நிலையில் பிரசாரத்தை தொடங்கிட இன்று நல்ல நாளாக அமையும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் கருதிய நிலையில் இம்மாநிலத்தில் விடாது பலத்த மழை பெய்து வருவதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
இம்மழை நீடித்தால் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு குறைந்து விடும் என்று வேதனையடைந்துள்ளனர்.