சென்னை பஸ் ஸ்ட்ரைக்கால் இழப்பு ரூ 80 லட்சம்!
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் காலை தொடங்கி பிற்பகல் வரை நடந்த பஸ் ஸ்ட்ரைக்கால் மட்டும் அரசுக்கு ரூ 80 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தியாகராய நகரில் இருந்து, கிழக்கு முகப்பேருக்கு சென்ற அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும், திமுக கவுன்சிலர் மகனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஓட்டுநர் குமாரவேல், நடத்துநர் குமார், இன்னொரு பஸ்சின் ஓட்டுநர் தினகர் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
4 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி, நேற்று முன்தினம் காலையில் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பஸ்களை இயக்காமல் அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கடுமையான அவதிக்குள்ளானார்கள்.
இந்தப் போராட்டத்த்தின் போது 1500 பஸ்கள் ஓடவில்லை. 17 ஆயிரம் ஓட்டுநர்கள்-நடத்துநர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். இதன் காரணமாக ரூ.80 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கார் ஓட்டுநர் உதயகுமார், ஸ்டாலின், முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.