காமன்வெல்த் போட்டி-இந்தியாவின் 11வது தங்கத்தை வென்றார் ரவிக்குமார்
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா. நேற்று தனது 11வது தங்கப் பதக்கத்தை அது வென்றது. பளுதூக்கும் வீரர் கே.ரவிக்குமார் இந்த தங்கத்தை வென்று கொடுத்தார்.
69 கிலோ எடைப் பிரிவில் 321 கிலோ என்ற புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைத் தட்டி்ச் சென்றார் ரவிக்குமார்.
ஒரிசாவைச் சேர்ந்த ரவிக்குமார் தனக்கு அடுத்த இடத்தைப் பிடித்த இலங்கையின் சிந்தனா விதனகேவை விட 13 கிலோ அதிகஎடையைத் தூக்கினார் ரவிக்குமார். சிந்தனா308 கிலோ எடை தூக்கி வெள்ளியையும், மலேசியாவின் முகம்மது ஹபிபி மன்சூர் 306 கிலோவுடன் வெண்கலத்தையும் வென்றனர்.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்தினார். ஸ்னாட்ச் பிரிவில் அவர் 146 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார்.
தொடர்ந்து 2வது இடத்தில்...
பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 24 பதக்கங்களை அது பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா 21 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.