சிபிஐ விசாரணை: மனைவி-மகனுடன் தொழிலதிபர் தற்கொலை
சென்னை: சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த தொழிலதிபர் தனது மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். இரண்டரை மாத குழந்தைக்கும் விஷம் கொடுத்ததில் அந்தக் குழந்தையும் உயிருக்குப் போராடி வருகிறது.
சென்னை கிண்டி பச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முகமது இஸ்மாயில் சதக் (38). பழைய இரும்பை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இன்று காலை அவர் தனது மனைவி ஷபீன், மகன் முகம்மத் ஈசா (3) ஆகியோருடன் கட்டிலில் பிணமாக கிடந்தார். அருகில் இரண்டரை மாதமே ஆன பச்சிளம் குழந்தை இஸ்ரா பாத்திமாவும் வாயில் நுரை தள்ளிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தது.
குழந்தையை சதக்கின் தந்தை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இஸ்மாயில் சதக், மனைவி, குழந்தைகளுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இஸ்மாயில் சதக்குக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதோடு கடன் தொல்லையாலும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களாக ஒரு வழக்கு தொடர்பாக இஸ்மாயில் சதக்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை மிரட்டியதாகவும் இதன் காரணமாகவே, இஸ்மாயில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications