தூத்துக்குடி அருகே 4200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடி அடுத்த கயத்தாறில் 4200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கயத்தாறு மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் எரிசாராயம் இருப்பதாக கயத்தாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, உடனே கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பி , சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி மற்றும் கயத்தாறு போலீசார் மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், செந்தூர்பாண்டி மகன் தென்னரசு என்பவரின் தென்னை தோட்டத்தில் உள்ள ஒரு அறையில், 120 கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எரிசாயம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 120 கேன்களில் சுமார் 4200 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து தோட்ட உரிமையாளர் தென்னரசு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.