தனியார் கான்ட்ராக்டர்கள் நீக்கம்... மணல் விலை லோடுக்கு ரூ 1000 வரை குறைந்தது!
சென்னை: மணல் குவாரி காண்டிராக்டிலிருந்து தனியார் நீக்கப்பட்டதால் லோடு விலையில் ரூ 1000 வரை குறைந்தது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடக்கும் கட்டுமானப்பணிகளுக்கு பாலாற்றின் மணல்தான் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்ட மக்கள் தாமிர பரணி ஆற்றின் மணலை கொண்டு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
கடந்த மாதம் மணல் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு லாரி மணல் (2 யூனிட்) ரூ. 5000, ரூ. 5500 என்று விற்கப்பட்டது. இதனால் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளி தனியார் முதலாளிகள் மணல் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இயந்திரம் மூலம் மணல் அள்ள தடை விதித்தது. பாலாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக் கூடாது என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மணல் குவாரிகளில் தனியார் முற்றாக அகற்றப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை நடந்து வருகிறது.
இதன் காரணமாக மணல் விலை குறைந்துள்ளது. இதுவரை ரூ 5500 வரை விற்கப்பட்ட ஒரு லாரி மணல், இப்போது ரூ. 4,500க்கு விற்கப்படுகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து மணல் விலை ரூ. 1000 குறைந்துள்ளது.
இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இயந்திரம் மூலம் மணல் 2 இடங்களில் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது பாலாற்றில் 4 இடங்களில் மணல் விற்பனை செய்யப்படுவதால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விரைவாக எடுத்துச் செல்கின்றன.












Click it and Unblock the Notifications