தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினரையும் தூக்கிலிடக் கோரி மதுரையில் பெண் உண்ணாவிரதம்
மதுரை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 அதிமுகவினருக்கும் உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி மதுரையில் ஒரு பெண் திடீரென உண்ணாவிரதத்தில் உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோயில் அருகே வியாழக்கிழமை காலை பத்திரகாளி என்ற இந்திரதனுஷ் தேவேந்திரா என்ற பெண் திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் எம்.பில் படித்தவர் என்றும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அதிமுகவினருக்கும் உடனடியாக தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து இதுபோல பொது இடங்களில் அனுமதி பெறாமல் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர்.