எனது பெயரைச்சொல்லி பெண்களிடம் நிதி வசூல்-விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை: எனது பெயரைப் பயன்படுத்தி ஒரு மோசடியான திட்டத்தைக் கூறி சிலர் ஏழைப் பெண்களிடம் நிதி வசூலிப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் சில மாவட்ட கழக முகவரியில் மகளிர் அணி என்ற பெயரால், ஒரு சிலரால் பாரங்கள் அச்சடிக்கப்பட்டு, ஒவ்வொரு பாரமும் ரூ.100 என்ற வீதத்தில் மகளிர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன்.
இந்த சமூக விரோதிகள் என் பெயரால் ஒரு கவர்ச்சி திட்டத்தை அறிவித்து முறைகேடாக பணம் வசூலிக்கிறார்கள்.
எனது பெயரால் ஒரு திட்டத்தை அறிவித்து, அதன்படி மகளிரிடம் இவர்கள் அணுகி, ஒவ்வொருவருக்கும் ரூ.35 ஆயிரம் கடனாக கிடைக்கும், அதில் ரூ.5 ஆயிரம் மானியமாக தரப்படும் என்றும், மாதந்தோறும் ரூ.500 கட்டினால் போதும் என்றும் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தில் ஒழுங்காக பணம் செலுத்துபவர்களுக்கு கடைசியாக விஜயகாந்த் ஒரு தொகையை தள்ளுபடி செய்வார் என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி ஏழை மகளிர் எனது பெயரில் இந்த திட்டம் சொல்லப்படுவதால், ஏமாந்து பணம் கொடுத்து இந்த பாரங்களை வாங்குகிறார்கள் என்றும் அறிகிறேன். சில பெண்கள் இது குறித்து அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்ட பின்னரே இந்த மோசடி பற்றி தெரியவந்தது.
எனது பிறந்த நாளின் போது நான் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதை அறிந்து கொண்டு வேண்டு மென்றே மாற்றுக் கட்சியினரும், சில விஷமிகளும் தவறான வழிகளில் ஆதாயம் பெறவும், அதே நேரத்தில் என் பெயருக்கு களங்கம் கற்பிக்கவும் முனைந்துள்ளனர். இது பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்து முறைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில், எனது பெயரை கெடுக்க வேண்டுமென்று சில அரசியல் சூதாடிகள் சமூக விரோதிகளை தூண்டிவிட்டு இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறேன். காவல்துறை நடுநிலைமையோடு விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த மோசடியை நம்பி பொதுமக்களும், மகளிரணியினரும், தாய்மார்களும் இந்த சதி வலையில் விழ வேண்டாம். இந்த மோசடி கும்பல் உங்களை அணுகினால், அவர்களை உடனடியாக போலீசில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications