கேரளாவில் எய்ட்ஸ் சிகி்ச்சை அளித்த போலி டாக்டர் கைது
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பிபி ரோடு அருகே உள்ள பகுதியில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது ஒரு டாக்டர் சிகிச்சை அளித்து வந்தார். அவர் போலி டாக்டர் என பெரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த டாக்டரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த ஜூனாயி அப்சின் எனவும், 10-ம் வகுப்பு கூட படிக்காதவர் என்று்ம் தெரிய வந்தது.
இவர் அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். குறிப்பாக எய்ட்ஸ் நோய்க்கு சிகி்ச்சை அளிப்பதாகக் கூறி பலரை ஏமாற்றியதும் தெரிய வந்தது. விசாரணையின்போது அப்சின் முர்ஷிதாபாத்தில் நர்சிங் படித்ததற்கான சான்றிதழ் ஒன்றை காண்பித்தார். ஆனால் அதுவும் போலி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.