ஜெயலலிதாவைக் காக்க அதிமுக அமைத்துள்ள 'கமாண்டோ'ப் படை!
இதுகுறித்து கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான வேலுமணி கூறுகையில்,
மதுரையில் வரும் 18ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது என பல மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மத்திய அரசின் கருப்பு பூனை படை பாதுகாப்பும் உள்ளது. இதோடு சேர்ந்து நாங்கள் அமைத்துள்ள அதிமுக அதிரடிப்படையும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கும்.
இதற்காக தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற ஆயிரம் பேர் தற்போது உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற இவர்கள் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் வரும் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் அதிமுகவின் அதிரடிப்படையினர் ஒரு நாள் முன்னதாக வரும் 17ஆம் தேதியே மதுரைக்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுக்கூட்டத்திற்கு யாராவது இடையூறு செய்தாலோ, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அதிமுகவின் அதிரடிப்படையினர் உரிய முறையில் எதிர்கொள்வார்கள் என்றார் வேலு மணி.