பிரபல சித்த மருத்துவர் சாமிகிரி சித்தர் விஷமருந்தி தற்கொலை
பல்வேறு டிவி சானல்களில் ஒளிபரப்பாகும் சித்த வைத்தியம் குறித்த நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கொடுத்து வந்தவர்தான் இந்த காதொலி சித்தர். கோவையைச் சேர்ந்தவர். அங்கு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சித்த மருத்துவ மையத்தை நடத்தி வந்தார். வயது 75 ஆகிறது.
இவருக்கு 6 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். அவரது மனைவி சிவாத்தாள் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சாமிகிரி சித்தரின் வீடு ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் உள்ளது. அந்த வீட்டில் அவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாமிகிரி சித்தர் வழக்கம்போல் தனது அறைக்கு படுக்க சென்றார்.
நேற்று காலை அவரது அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகன்கள் பார்த்தபோது இறந்து கிடந்தார்.
இதுபற்றி ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது. நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தையும் அவர் எழுதி வைத்திருந்தார்.
அதில்,
எனக்கு 75 வயது ஆகிவிட்டது. என்னுடைய மனைவி சிவாத்தாள் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அவள் இறந்தபிறகு நான் மிகுந்த துன்பப்பட்டேன். 46 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து வந்த சிவாத்தாள் மனைவி என்ற நிலையில் ரதியாகவும், பதிவிரதையாகவும் இருந்து வந்தாள். என்னோடு வாழ்ந்து அவள் 11 குழந்தைகளை பெற்றெடுத்தாள்.
அவள் இறந்தபிறகு நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். எனது கடைசி காலத்தில் நான் நோய்வாய்ப்பட்டு சாக விரும்பவில்லை. மேலும் நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவும் விரும்பவில்லை. நான் கஷ்டப்பட்டால் என் மக்களும் கஷ்டப்படுவார்கள். அதனால்தான் நான் மேலோகம் செல்ல விரும்புகிறேன்.
என்மீது என் மகன்கள், மகள்கள் மிகவும் பிரியமாக இருந்து உள்ளனர். நான் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அவ்வாறு பிரியமாக இருந்தவர்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் என் மனைவி சென்ற இடத்துக்கே சென்று விடுகிறேன்.
சித்த வைத்தியம் கற்றுக்கொண்டு எனது மூளையை பயன்படுத்தி மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து பலருக்கு பயனுள்ளவனாக இருந்திருக்கிறேன். நிறைய புத்தகங்கள், பாடல்கள் எழுதி உள்ளேன்.
நாத்திகனாக இருந்த என்னை பாட்டெழுத தஞ்சைக்கு ராமையா என்பவர் அழைத்துச்சென்றார். அங்கு பாடல் எழுத கற்றுக்கொண்டபிறகு நான் ஆத்திகன் ஆனேன்.
என் மனைவி சிவாத்தாளின் வண்ணப்படத்தை என் மார்போடு கட்டி எனது உடலை அடக்கம் செய்யுங்கள் என்று எழுதியுள்ளார் சாமிகிரி சித்தர்.