பெண் போலீசை கற்பழித்த வாலிபர் கொலை: கணவர், நண்பர் கைது
சென்னை: சென்னையில் பெண் போலீஸை கற்பழித்த வாலிபரை அந்தப் பெண்ணும், அவரது கணவர், நண்பர் ஆகியோர் கொலை செய்தனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த சஜாத் அலி ஷேக் (28).
கடந்த 2ம் தேதி இரவு முதல் இவரை காணவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர் தாகிர் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் நேற்று மாலை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் சஜாத் அலியின் பிணம் மிதந்தது. அவரது முதுகில் கத்திக்குத்து காயம் இருந்தது. உடலின் பல இடங்களில் அடித்து உதைத்ததற்கான காயங்களும் இருந்தன.
இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடினர். விசாரணையில் ஆவடியைச் சேர்ந்த அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகியோர் சி்க்கினர்.
அன்வர்ராஜாவும் ஆவடியில் ஹோட்டல் வைத்துள்ளார். இவரது கடையில் தான் சஜாத் அலி முதலில் வேலை பார்த்துள்ளார். அன்வர்ராஜாவின் நண்பரான அசோக்குமாரின் வீட்டு மாடியில் வாடகைக்கு இருந்துள்ளார்.
அசோக்குமாரின் மனைவி கவிதா (32) பூந்தமல்லியில் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரை சஜாத் அலி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி அறிந்த அசோக்குமார் தனது நண்பரான அன்வர்ராஜா, மனைவி ராதாவுடன் சேர்ந்து சஜாத் அலியை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆவடிக்கு கடத்திச் சென்று கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் கொலை செய்துவிட்டு பிணத்தை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று போரூர் கால்வாயில் வீசியுள்னர்.
இதை வாக்குமூலமாகவே மூவரும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.