இப்போது நடந்தது செமி பைனல்தான்-பைனலில் நாங்களே வெல்வோம்:காங்.
பெங்களூர்: இப்போது நடந்திருப்பது செமி பைனல்தான். இதில் பாஜக வென்றுள்ளது. ஆனால் அக்டோபர் 18ம் தேதி நடக்கப் போகும் இறுதிப் போட்டியில் நாங்கள்தான் வெல்வோம் என்று கூறியுள்ளார் கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அவர் கூறுகையில், 16 பேரை சட்டவிரோதமாக தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.
16 பேரையும் நீக்கியது சட்டவிரோதமானது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இன்று நடந்துள்ளது அரை இறுதிப் போட்டிதான். ஆனால், இறுதிப் போட்டி அக்டோபர் 18ம் தேதிதான். அதில் எங்களுக்கே வெற்றி கிடைக்கும். இந்த ஆட்சி நீடிக்காது, நிலைக்காது என்றார் சித்தராமையா.
பாஜக அரசு வீழ்ந்தே தீரும்-குமாரசாமி:
தற்போதைய அனைத்து அமளிகளுக்கும் மூலகாரணமான மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறுகையில், இப்போது நடந்துள்ளது நம்பிக்கை வாக்கெடுப்பே அல்ல. இது சட்டவிரோதமானது. இந்த அரசு பதவியில் நீடிக்கத் தகுதியே இல்லை. 16 பேரை தகுதி நீக்கம் செய்ததாக கூறி விட்டு பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த அரசு வீழ்ந்தே தீரும். அதில் சந்தேகமே வேண்டாம். அக்டோபர் 18ம் தேதிக்குப் பிறகு அரசு இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications